16/01/2023
கல்வெட்டுகளில் பொங்கல் - பொங்கல் விழா - 6
------------------------------------------------------
பொங்கல் விழாவை ஒட்டிய மறுநாள் அன்று, மாட்டுப் பொங்கல் என்று வழங்கி கொண்டாடப்படுவதுடன், ஓடுகின்ற மாடுகளைப் பிடித்து விளையாடும் போட்டிகளும், மாடுகள் மட்டுமல்லாது, இன்ன பிற நாட்டுப்புற விளையாட்டுகளும் தொடர்ந்து கொண்டாடப்பட்டு வருகின்றன.
சிந்துசமவெளி நாகரீகத்திலேயே இவ்விளையாட்டு குறித்த குறியீடுகள் கிடைத்துள்ளன. தமிழகத்தில் இன்றைக்கு 3500 ஆண்டுகளுக்கு முன்பு கி.மு 1500 காலத்தில், அதாவது, “மஞ்சு விரட்டு” அல்லது “எருது கட்டுதல்” என்ற வீர விளையாட்டே பாரம்பரியமாக நிலவியது.
தமிழர் திருநாளாம் பொங்கலையொட்டி பல ஊர்களில் இவ்விளையாட்டு நடத்தப்படுகின்றது. இதைக்காண வெளி மாநிலங்களிலிருந்தும், வெளி நாடுகளிலிருந்தும் ஏராளமானோர் தமிழகத்திற்கு வருகை தருகின்றனர்.
சல்லிக்கட்டு என்பது சில காலமாக மட்டும் இவ்விளையாட்டின் பெயராக வழங்கி வருகிறது. சங்க இலக்கிய நூல்களில் 'ஏறு தழுவல்'என்பதே இதன் பெயராக இருந்தது. ஏறு என்பது ஆடுகளத்தில் இருக்கும் காளையைக் குறித்துச் சொல். தழுவல்>தழுவுதல் என்றால் அணைத்து நிற்பது. காளையின் கொழுத்த திமிலைப் பற்றிக் கொண்டு காளை( இளைஞன்) ஒருவன் தொங்குவதே வெற்றியின் அடையாளம்.
தமிழர்களின் வீர விளையாட்டுகளில் ஒன்றாகக் கருதப்படும் இவ்விளையாட்டு, மதுரை மாவட்டம் அவனியாபுரம், அலங்காநல்லூர் மற்றும் பாலமேடு எனும் ஊர்களிலும், திருச்சி, பெரிய சூரியூர், நாமக்கல் மாவட்டம் அலங்காநத்தம், சேலம் மாவட்டம் தம்மம்பட்டி , கூலமேடு, தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம், புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலை, வேலூர் மாவட்டம் திருவண்ணாமலை மாவட்டம் ஆதமங்கலம் புதூர் மற்றும் தேனீமலை, தேனி மாவட்டம் போன்ற ஊர்களில், ஆண்டுதோறும் தை மாதத்தில் பொங்கல் திருநாளையொட்டி நடத்தப் பெறுகின்றன. புதுக்கோட்டை மாவட்டம் ஜல்லிக்கட்டின் "சொர்க்க பூமியாக " இன்னும் திகழ்ந்து வருகிறது.
தமிழர்களின் வீர விளையாட்டுக்களில் ஒன்றாகக் கருதப்படும் இவ்விளையாட்டு கோனார்கள் எனப்படும் ஆயர்கள் (இடையர்) அதிகமாக வாழும் இடங்களில் நடத்தப்படுகின்றது.
கோனார்கள் அதிகமாக வாழும் தென் தமிழகம் மற்றும் வட தமிழகங்களில் இன்றளவும் ஏறுதழுவுதல்(சல்லிக்கட்டு) நடைபெறுகின்றது.
மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு உலக புகழ் பெற்றது.
சல்லிக்கட்டு தற்போதய தமிழ்நாட்டில் ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு விதமாக நடைபெறுகிறது. மதுரை அலங்காநல்லூர் போன்ற இடங்களில் வாடிவாசல் வழியாக வெளியேறும் காளைகளை இளைஞர்கள் விரட்டிச் சென்று அதன் திமில் மீது தொங்கியபடி குறிப்பிட்ட தூரம் செல்கிறார்கள்.
வட தமிழகத்தில் வடம் மஞ்சுவிரட்டு என்ற பெயரில், 20 அடி நீளக் கயிற்றால் காளையைக் கட்டி, இருபுறமும் காளையை ஆண்கள் இழுத்துப் பிடிக்க, ஒரு சிலர் மட்டும் அதன் முன்னே நின்று கொம்பில் உள்ள பரிசுப் பணத்தை எடுக்க முயல்கிறார்கள்.
மஞ்சு விரட்டு என்பது தமிழகத்தில், குறிப்பாக சிவகங்கை மாவட்டத்தை சுற்றியுள்ள மாவட்டங்களில் உள்ள கிராமங்களில் கொண்டாடப்படும் விளையட்டு. "மஞ்சி" என்பது தாளை வகை கற்றாலை நார் கொண்டு திரித்து தயாரிக்கப்படும் ஒரு வகை கயிறு ஆகும். "மஞ்சி கயிற்றால்" மாடுகளின் கொம்புகளில் கட்டப்படும் தங்க நாணயங்கள், பணமுடிப்பபு, புத்தாடைகள், சலங்கை மணிகள் ஆகியவற்றை எடுப்பதற்காக வீரர்கள் மாடுகளை விரட்டி சென்று பிடிக்கும் விளையாட்டு மஞ்சி விரட்டு விளையாட்டு ஆகும்.
பிற்காலத்தில் "மஞ்சி" என்ற சொல் மருவி "மஞ்சு விரட்டு" ஆனது.மஞ்சு விரட்டு விளையட்டு, பொதுவாக அறுவடை காலம் முடியும் போது நீர் வற்றிய கண்மாய் உட்புறத்தில் "மஞ்சு விரட்டு தொழு" அமைக்கப்பட்டு அந்த தொழுவில் இருந்து காளைகள் கண்மாய் பகுதிக்குள் திறந்து விடப்படும். ஓடும் காளைகளை வீரர்கள் விரட்டிசென்று மஞ்சி கயிற்றில் கட்டியுள்ள பரிசுகளை எடுப்பர்.
ஆனால் பண்டைய காலத்தில் ஆயர்களின் திருமணதில் கலந்த ஏறுதழுவுதல் தமிழகத்தின் அனைத்து பகுதியிலும் ஒரே விதமாகவே நடந்துள்ளது. பண்டைய தமிழ் நூல்கள் ஏறுதழுவலை ஒரே விதமாக தான் குறிப்பிடுகின்றன.
ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ஒரு ஒழுங்கு முறைக்குள் வந்து விட்ட இவ் ஏறுதழுவுதல் நிகழ்ச்சி அதற்கும் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தோற்றம் பெற்றிருக்கவேண்டும்.
ஏறுதழுவுதல், ஏறுகோள், மாடுபிடித்தல், ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு, பொல்லெருது பிடித்தல் என்று தமிழகத்தின் பல பகுதிகளில் பல பெயர்களில் தமிழர்களின் வீர விளையாட்டாம் ஏறுதழுவுதல் அழைக்கப்பெறுகிறது.
ஏறு தழுவுதல்:
ஏறுதழுவல் அல்லது ஏறு தழுவுதல் இரண்டும் இலக்கிய தமிழ் சொல்.
ஏறு தழுவுதல் உலக அளவில் பேசப்படும் பொருளாகியிருக்கிறது.
தமிழரின் அறம் தனக்கு உணவு இல்லை என்றாலும் வீட்டில் வளர்க்கப்படும் காளைகளுக்கு உணவும், நீரும் கொடுத்து உபசரிக்கும் உயரிய இனம் தமிழினம். ஏறு தழுவுதல் சங்க காலத்திலேயே தமிழரின் வாழ்வியலில் காளையரின் வீரத்தைக்காட்ட காளைகளை அடக்கிய அடையாளச் சான்றுகள் கல்வெட்டுகளில் பொறிக்கப்பட்டுள்ளது. ஏறு என்ற சொல் காளை என்ற பொருளில் கையாளப்படுகிறது. ஏறு ஓட்டி உழுத பரம்பரை தமிழ்ப்பரம்பரை. வீட்டில் வளர்க்கப்படும் காளைகள் உடன்பிறந்த உறவுகளில் ஒன்றாகவே போற்றப்படுகிறது. அதனை விலங்காகப் பார்ப்பதில்லை. தன்னோடு ஒட்டி உறவாடும் வீரத்தின் விளைநிலமாக கட்டிக்காத்து பெற்ற பிள்ளைப்போல் போற்றி வளர்த்தனர். விவசாயத்தின் அடிநாதமாகவும், வீரத்தின் அடிச்சுவடாகவும் காளைகள் அடையாளப்படுத்தப்பட்டன. அதனால்தான் காளையர்கள் காளைகளை அடக்கி விட்டால் அவன் வீரன் என்று அடையாளப்படுத்தப்படுகிறான். சரித்திரம் சொல்லும் ஆளுமையாக சமூகத்தில் இடம் பெறுகிறான்.
பெண்களும் வீரத்தை நேசிப்பதும், வீரனை கைப்பிடிப்பதும் இவற்றின் வெளிப்பாடும்தான் ஏறு தழுவுதல். காளையை அடக்கி தன் வீரத்தைக்காட்டும் ஆடவரையே பெண்கள் திருமணம் செய்ய சம்மதித்தனர். தனக்குக்கணவனாக வருபவன் பொன்னோடும், பொருளோடும் வர வேண்டாம். ஆனால் அவன் வீரத்தோடு வர வேண்டும் என்று விரும்பினர். இதனை சங்க இலக்கிய கலித்தொகை பதிவு செய்திருக்கிறது. கலித்தொகையின் முல்லைக் கலி முழுவதும் ஏறு தழுவுதலைப் பேசுகிறது. முல்லைக் கலியில் உள்ள பதினேழு பாடல்களில், முதல் ஏழு பாடல்கள் ஏறுதழுவலைப் பற்றிக் கூறுகின்றன.
'உயிரைக் கொல்லும் வலிமையுடைய காளையின் கொம்புகளுக்குப் பயந்து எவன் ஒருவன் ஓடிப்போகிறானோ அவனை இந்தப்பிறவியில் மட்டுமல்ல அடுத்த பிறவியிலும் விரும்பமாட்டாள் முல்லை நிலத்துப் பெண்' என்று கூறுகிறது. அப்படி என்றால் முல்லை நிலத்தில் வாழ்ந்த ஒரு ஆண் தான் திருமணம் செய்ய வேண்டும் என்றால் காளையை அடக்கி தன் வீரத்தை காட்டியே ஆக வேண்டும்.
குறிஞ்சி நில மக்களும் முல்லைநில மக்களும் தங்கள் நிலங்களில் உள்ள வலிமை வாய்ந்த எருதுகளை ஒன்றுடன் ஒன்று பொரும்படியாகச் செய்து ஆரவாரம் செய்வர். இவ்வெருதுகளின் வெற்றியைத் தங்கள் வெற்றியாக எண்ணி மகிழ்வர். இதனை,
'இனத்திற் றீர்ந்த துளங்கிமி னல்லேறு
மலைத்தலை வந்த மரையான் கதழ்விடை
மாறா மைந்தின் ஊறுபடத்தாக்கிக்
கோவலர் குறவரோ டொருங்கியைந் தார்ப்ப
வள்ளிதழ்க் குளவியுங் குறிஞ்சியுங் குழைய
நல்லேறு பொரூஉம் கல்லென் கம்பலை' (மலை.330-335)
பழந்தமிழ் நூலான கலித்தொகையின் முல்லைக் கலியில் இடம்பெறும் பாடல்களில் ஏறுதழுவுதல் சிறப்பாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
கலித்தொகையின் முல்லைக்கலியில் இடபெறும் பகுதியில் மாடுகளின் நிறம், மாடுகளின் வகை, மாடுகளின் வீரம், அதனை அடக்கும் இளைஞர்களின் செயல், பரண்மீது அமர்ந்து ஏறு தழுவு தலைப் பார்க்கும் பெண்களின் பேச்சுகள், பெண்களைப் பெற்ற பெற்றோர்களின் இயல்பு யாவும் சிறபாகக் காட்டப்பட்டுள்ளன.
பிடவம்பூ, செங்காந்தள்பூ, காயாம்பூ உள்ளிட்ட மலர்களை அணிந்த ஆயர்கள் தம் காளைகளை அடக்குபவர்களுக்குத் தம் மகளைத் தருவதாக உறுதியளித்துச் சிவபெருமானின் குந்தாலிப்படை போன்று மாட்டின் கொம்புகளைக் கூர்மையாகச் சீவினர். அவ் எருதுகள் இடிஒலி போல முழக்க மிட்டுத் தொழுவுக்கு வந்தன. அந்த எருதுகளைத் தழுவியவருக்கு அளிப்பதாகச் சொன்ன மகளிர் வரிசையாய் நிற்பர். அல்லது பரண்மீது அமர்ந்து பார்ப்பர்.
ஏறு தழுவதற்கு முன்பாக அத்தொழிலில் ஈடுபடும் இளைஞர்கள் நீர்த்துறைகளிலும், ஆலமரத்தின் கீழும், மாமரத்தின் கீழும் உள்ள தெய்வங்களை வணங்கி முறைப்படித் தொழுவில் பாய்ந்து காளைகளை அடக்குவர். அவ்வாறு அடக்க முற்படுபவனின் மார்பைக் காளைகள் குத்திக்கிழிப்பது உண்டு. அக்காட்சி பாரதக் கதையில் திரொளபதையின் கூந்தலைத் தொட்ட துச்சாதனனின் மார்பைப் பிளந்த வீமனைப்போல் இருந்தது என்று ஏறு தழுவும் காட்சி முல்லைக்கலியில் விளக்கப்பட்டுள்ளது.
பல வகை காளை மாடுகள் ஓரிடத்தில் (பட்டி) அடைக்கப்பட்டு, பின்பு மாடுபிடிக்க விடப்படும். அவ்வாறு அடைக்கப்படிருந்த பல மாடுகளின் காட்சி ஒரு குகையில் சிங்கம், குதிரை, ஆண் யானை, முதலை முதலியவற்றை ஒரே இடத்தில் அடைத்தால் ஏற்படும் நிலைபோல பட்டியில் இருந்தது எனச் சங்க இலக்கியப் புலவன் குறிப்பிட்டுள்ளான்.
ஒரு காளைமாடு இளைஞன் ஒருவனைக் கொம்பால் குத்துகிறது. அவன்குடல் சரிந்து வெளி வருகிறது. அவற்றை அவன் எடுத்து வயிற்றில் இடுகின்றான்; வேறொரு காளை மாட்டில் தொத்திக் கிடப்பவன் காளைமாட்டின் மேல் இடப்பட்ட மாலைபோல் இருந்தான் எனவும் குறிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு பலரை மாடுகள் குத்திக் கிழிப்பாதல் மாடுபிடி களம் குருதிக் கறையுடனும் மரண ஓலத்துடன் விளங்கித் தோன்றியுள்ளது. இது துரியோதனன் உள்ளிட்டவரைக் காவுகொண்ட படுகளம் போல் இருந்தது என(104-4) ஒரு பாடல் குறிப்பிடுகிறது.
எனவே இவ்வீர விளையாட்டு தமிழ்இனத்தின் குறியீடு. ஏறு தழுவுதல், முல்லை நிலத்து மக்களின் அடையாளம். இவ்வாறு ஆய மகளிரும் ஏறுதழுவலைக் காண ஆர்வம் காட்டியூள்ளனர். ஏறுதழுவி வென்ற வீரனையே மணக்கவூம் விரும்பினர்.கெல்லேற்றுக்கு அஞ்சுகின்றவனை ஆயமகள் தழுவ விரும்பவில்லை உயிருக்குப் பயந்து ஏறுதழுவாதிருக்கும் ஆயர் இளைஞரை யாரும் விரும்புவதில்லை என்பதை,
"கொல்லேற்றுக் கோடஞ்சுவாணை மறுமையூம்
புல்லாளே, ஆய மகள், (கலி.முல்லை.103 63-64)
அஞ்சார் கொலையேறு கொள்பவர் அல்லதை,
நெஞ்சிலார் தோய்தற்கு அரிய-உயிர் துறந்து-
நைவாரா ஆயமகள் தோள்,
வளியா அறியா உயிர், காவல் கொண்டு,
நளிவாய் மருப்பஞ்சும் நெஞ்சினார் தோய்தற்கு
எளியவோ, ஆயமகள் தோள்?
விலைவேண்டார் எம்மினத்து ஆயர் மகளிர்-
என்னும் வரிகள் புலப்படுத்துகின்றன.
பட்டினப்பாலையிலும், சிலப்பதிகாரத்திலும் ஏறு தழுவுதல் பற்றிய பல குறிப்புகள் உள்ளன.
ஏர் தழுவுதல் நடக்கும் நாள் அல்லது அதன் முந்தைய நாள் அன்று குரவைக்கூத்து நடைபெறும். முதல்நாள் நடந்தால் பெண்கள் ஏறு தழுவும் வீரன் வெற்றிபெற வேண்டிப்பாடுவர். ஏறு தழுவும் நாளின் மாலையில் குரவைக்கூத்து நடைபெற்றால் வெற்றிபெற்ற வீரனின் வெற்றியைப் புகழ்ந்து பாடுவர்.
வளமுடைய இளைய காளையை அடக்கி, ஏறியவருக்கு உரியவள் இம் முல்லை மலரை அணிந்துள்ள மென்மையான கூந்தலையுடையவள் என ஆய்ச்சியர்கள் ஆடிப்பாடுவதைச் சிலப்பதிகாரம்,
'மல்லல் மழவிடை ஊர்ந்தாற்கு உரியள் இம்
முல்லையம் பூங்குழல் தான்'
என்று குறிப்பிடுகிறது.
தமிழினத்தின் ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் வீரத்தை விரும்பினர். வீரமான வாழ்க்கையை வாழ்ந்து காட்டினர். இப்பண்பாட்டின் அடிச்சுவடு தான் இன்றைய ஜல்லிக்கட்டு. அன்றைக்கு காளையை அடக்கியவருக்கு பெண் கொடுத்தார்கள். இன்றைக்கு காளையை அடக்கினால் பொன்னும் பொருளும் கொடுக்கின்றனர். கால மாற்றத்தில் பரிசில்தான் மாற்றம் பெற்று இருக்கிறதே தவிர பண்பாடு மாறவில்லை. ஒரு இனத்தின் அடையாளத்தை, பண்பாட்டை உலக அளவில் எடுத்துச் சென்றது ஜல்லிக்கட்டு என்றால் மிகையாகது. பல்வேறு நாடுகளில் எருது விளையாட்டுகள் வழக்கத்தில் இருக்கின்றன. ஆனால் அவையெல்லாம் விளையாட்டாக மட்டும் பார்க்கப்படுகிறது. அங்கு பண்பாடு பேசப்படுவது இல்லை, அறம் கடைபிடிப்பதில்லை. ஒரு இனத்தின் குறியீடு இல்லை. தொன்மத்தின் சுவடும் இல்லை. ஆனால் ஏறு தழுவுதலில் மேற்சொன்ன அனைத்தும் உலக அளவில் பேசப்படும் பொருளாகியிருக்கிறது. தமிழரின் அறம் தனக்கு உணவு இல்லை என்றாலும் வீட்டில் வளர்க்கப்படும் காளைகளுக்கு உணவும், நீரும் கொடுத்து உபசரிக்கும் உயரிய இனம் தமிழினம்.
மஞ்செனத் திரண்ட மேனி வாய்ந்த மாக்காளைகளைக் கண்டு ஆயர் குலத்து இளைஞர் அஞ்சுவதில்லை; அவற்றின் கொட்டத்தை அடக்க மார்தட்டி நிற்பர். ஏறுகோள் என்பது அவர்க்குகந்த வீர விளையாட்டு. அக் காட்சி நிகழும் களத்தைச் சுற்றி ஆடவரும் பெண்டிரும் ஆர்வத்தோடு நிற்பர். செல்வச் சிறுவர் உயர்ந்த பரண்களில் அமர்ந்திருப்பர். ஏறுகளுடன் போராடுவதற்கு மிடுக்குடைய இளைஞர்கள் ஆடையை இறுக்கிக் கட்டி முறுக்காக நிற்பர். அப்போது முரசு அதிரும். பம்பை முழங்கும். கொழுமையுற்ற காளைகள் தொழுவிலிருந்து ஒவ்வொன்றாக வெளிப்படும்.
களத்திலுள்ள கூட்டத்தைக் கண்டு கனைத்து ஓடிவரும் ஒரு காளை; கலைந்து பாயும் ஒரு காளை; தலை நிமிர்ந்து, திமில் அசைத்து, எதிரியின் வரவு நோக்கி நிற்கும் ஒரு காளை. அவற்றின்மீது மண்டுவர் ஆயர்குல மைந்தர். கொம்பிலே உள்ளது காளையின் தெம்பு என்றறிந்து அதனையே குறிக்கொண்டு செல்வர். வசமாகப் பிடி கிடைத்தால் காளையின் விசையடங்கும்; வீறு ஒடுங்கும்; ஏறு சோர்ந்து விழும்.
ஏறுடன் போராட முனைவோர் எல்லாம் வெற்றி பெறுவதில்லை. கொம்பை நாடிச் சென்ற இடத்தில் தீங்கு விளைதலும் உண்டு. பிடி தப்பினால் அடிபட்டு விழுவர். எக்கசக்கமாய் அகப்படாமல் இடர்ப்படுவர்; காளையின் கொம்புகளால் குத்துண்டு குடலறுந்து குருதி வடிப்பர். இங்ஙனம் ஈனமுற்ற இளைஞர் நிலை கண்டு ஆயர் வருந்துவர்; ஆர்வமொழிகளால் அவர் துயரத்தை ஆற்றித் தேற்றுவர். வெற்றி பெற்ற காளையும் வீழ்ந்த இளைஞரருகே வெம்மை நீத்து வாடி நிற்கும். பேராண்மையின் அணியாகிய ஏறாண்மை கண்டு ஆயர்குல வீரர் அகங்களிப்பர்.
மாடுகளோடு தமிழன் பேசிக் கொண்டு இருக்கிறான். மாட்டின் பிறப்புமுதல் இறப்பு வரைக்கும் வீட்டில் கொண்டாடப்படும் ஒரு உறவாகவே பார்க்கப்படுகிறது. இவ்வெருதுகளின் வெற்றியைத் தங்கள் வெற்றியாக எண்ணி மகிழ்வர். இத்தனை அடிச்சுவடுகளை பெற்றிருக்கும் ஏறுதழுவுதல் தமிழரின் வாழ்வியலோடு ஒன்றிப்போய் விட்டது.
கடவுளுக்கு நிகராக காளைகள் போற்றப்பட்டு இருக்கின்றன என்பது தெளிவு. இறந்து போன காளைகளுக்கு இறுதிச் சடங்கு செய்து தெய்வ நிலைக்கு உயர்த்தப்படுகிறது. மனிதனை மனிதனாக மதிக்கத் தெரியாத சமூகத்தில் மாடுகளை மனிதனுக்கு நிகராக மதிக்கும் இனம் தமிழினம். மாட்டின் பின்னால் சென்று பிடிப்பது தமிழரின் அறமும் இல்லை, மறமும் இல்லை. நெஞ்சுக்கு நேர் சென்று கொம்புகளையும், திமிலையும் பிடித்து நிலை நிறுத்துவதுதான் ஆண்மையின் அடையாளமாக சுட்டிக்காட்டப்பட்டது. தன் உடம்பில் கீறல் விழுந்தால் கூட, காளையின் உடம்பில் சிறு வடு கூட விழுந்து விடக்கூடாது என்பதில் கவனமாக இருப்பர். அந்தளவிற்கு மனிதநேயத்தை கற்றுக் கொடுக்கும் இவ்விளையாட்டு உலக அளவில் தமிழரை அடையாளப்படுத்தி நிற்கிறது.
பழந்தமிழ் இலக்கியங்களிலும் சிந்துவெளி நாகரித்திலும் ஏறுதழுவல் நிகழ்ந்ததற்கான சான்றுகள் உள்ளன. ஏறு தழுவுதல் (மஞ்சு விரட்டுதல்) என்ற சொல் பழந்தமிழ் இலக்கியங்களில் காளையை அடக்கும் வீர விளையாட்டின் பெயராகப் பயின்று வருகிறது. கொல்லக்கூடிய காளையைத் தழுவிப் போரிட்டு அடக்குவதால் ‘கொல்லேறு தழுவுதல்’ என்றும் சிறப்பித்துக் கூறப்படுகிறது.பண்பாட்டுத் திருவிழாவாகவும், மக்களின் சமயம் சார்ந்த திருவிழாவாகவும், இளைஞர்களின் வீர உணர்வை நினைவுகூரும் விழாவாகவும் நடைபெறும் ஏறுதழுவுதல் பற்றி இலக்கியங்களில் கூறப்படும் காளைகள்:
1. சிவன் கணிச்சி போல் காளைகளின் கொம்பு சீவி விடப்படும்
2. வெண்கால்-காரி, புள்ளி-வெள்ளை, சேய் (செவலைக்காளை), குரால் (செம்புள்ளிக்காளை) முதலான காளைகள் பாடலில் குறிப்பிடப்படுகின்றன
உவமைகள்:
1. போரில் காயம் பட்டு வீழ்ந்தவனைப் போரிடுவதற்கு ‘ஒவ்வான்’ என விட்டுச் செல்லும் மறவன் போல ஒரு காளை கீழே விழுந்தவனை விட்டுச் சென்றது.
2. ஒரு காளை பொதுவனைக் கொம்பால் குத்தி உழலைமரம் போலச் சுழற்றியது
3. பாஞ்சாலியின் கூந்தலைப் பற்றியவன் நெஞ்சைப் பிளப்பதுபோல் ஒரு காளை நெஞ்சில் குத்தித் தூக்கியது
4. ஏறுகோள் காட்சி ஒன்று நூற்றுவரை அடக்கிய களம் போல இருந்தது
5. புலியும் களிறும் போரிடுவது போல் பொதுவர் காளையைத் தழுவினர்
6. அந்திக் கடவுள் எருமையை இடந்து கூளிப் பசியைத் தீர்ப்பவன் போல ஒரு காளை குத்தியது.
7. இருளில் வந்து தந்தையைக் கொன்றவனைப் போல ஒரு காளை குத்தியது.
8. சிவன் கணிச்சியில் தொங்கும் மாலை போல ஒரு காளை ஒருவன் குடலை மாட்டித் தூக்கியது.
9. பட்டம் விடுபவன் நூலைச் சுற்றுவது போலக் குடல் சரிந்தவன் தன் குடலை வயிற்றுக்குள் சுருட்டிக்கொண்டான்.
10. கூந்தல்-குதிரையை அடக்கியவன் போல ஒருவன் காளையை அடக்கினான்.
11. வெள்ளைக்காளையை அடக்குபவன் பாம்பு கௌவிய நிலாவை விடுவிக்கும் சிவன் போல் காணப்பட்டான்
அடக்கிய முறை
கொம்பைப் பிடித்து அழுத்தல், கழுத்தைப் பிடித்துக்கொண்டு காளையில் மார்பில் தொங்கல், கழுத்தைத் திருகல், இமிழ் என்னும் கொட்டேறியைத் தழுவல், தோளில் ஏறல், நெருக்கிப் பிடித்தல் முதலானவை காளையை அடக்கப் பொதுவர் கையாண்ட உத்திகள்.
காளையின் கொம்பைப் பிடித்தல் ஆண்மை, வாலைப் பிடித்தல் தாழ்மை என்பது தமிழர் கொள்கை. வாலைப் பிடித்தவன் காளையின் காலால் உதைபட்டு மண்ணிடை வீழ்வான். ஆதலால் கொம்பைவிட்டு வாலைப் பற்றுதல் கோழையின் செயல்; தோல்வியின் அறிகுறி. காளைப் போரில் வெற்றி பெற்ற இளைஞரை ஆயர் குலம் வியந்து நோக்கும்; இள நங்கையர் கண்கள் நயந்து பார்க்கும்.
வீறுடைய ஏறு முல்லை நிலத்தில் வயிறார புல்லுண்டு, வளமாக மேய்ந்து மாடுகள் அழகிய மேனி பெற்று விளங்கும். அந் நிலத்தில் வாழும் ஆயர்க்கு அவைகளே அரும்பெருஞ் செல்வம். மாடுகளில் ஆண்மையுடையது எருது. அதனை ஏறு என்றும், காளை என்றும் கூறுவார். வீறுடைய ஏறுகள் கடும் புலியையும் நேர நின்று தாகும்; வலிய கொம்புகளால் அதன் உடலைப் கீரிக் கொல்லும். இத்தன்மை வாய்ந்த எருதுகளைக் கொல்லேறு என்றும், மாக்காளை என்றும் தமிழ் நாட்டார் போற்றுவர்.
புலிக்குளம் காளை
புலிக்குளம் என்னும் ஊர் சிவகங்கை மாவட்டத்தில் உள்ளது. ஜல்லிகட்டுக்கு என்று பிரத்தேகமாக வளர்க்கப்படும் காளையினம் புலிக்குளம். இது காங்கேயம் காளைகளை விட மிகவும் ஆக்ரோசமானது. புலிக்குளம் காளைகளை பாரம்பரிய கால்நடை வளர்பாளர்களான கோனார்களே (ஆயர்) வளர்த்து வருகின்றனர். உலகளவில் இந்திய நாட்டின பசுக்களின் பாலே அதிக நோய் எதிர்ப்பு சக்தி கொண்டுள்ளதாக அறியப்பட்டுள்ளது. அதிலும் புலிக்குளம் இன பசுக்களின் பாலே சிறந்தது என்று விஞ்ஞானிகளால் நிருபிக்கப்பட்டுள்ளது.
இலக்கியம் தவிர்த்து கல்வெட்டுகளிலும் ஏறுதழுவல் இடம்பெற்றுள்ளது.
ஏறு தழுவுதல் எனப்படும் ஜல்லிக்கட்டு தைத் திங்கள் முழுவதும் பல்வேறு இடங்களில் பல்வேறு முறைகளில் கொண்டாடப்படுகிறது.
நீண்ட நெடுங்காலமாக தமிழர்களின் பாரம்பரியமாக நிலவி வந்த “மஞ்சு விரட்டு”, ஏறத்தாழ 500 ஆண்டுகளுக்கு முன்பு நாயக்க மன்னர்களின் ஆட்சிக் காலத்தில் மாட்டை அடக்கும் ஜல்லிக்கட்டாக மாறியது.
நாயக்கர் ஆட்சியில் படிப்படியாக ஜமீன்தாரி முறை உருவாகி வந்தது.ஜமீன்தார்கள் தமது ஆதிக்கத்தையும் செல்வாக்கையும் பறைசாற்றும் அடையாளமாக உருவாக்கியதுதான் ஜல்லிக்கட்டு. ஜமீன்தார்களே ஜல்லிக்கட்டு காளைகளை வளர்த்து, அதை யாராலும் அடக்க முடியாது என்று வீரப் பெருமை பேசினர். மாடுகளின் கொம்புகளில் தங்கக் காசுகளைப் பையில் போட்டுக் கட்டி, அதை அடக்குவோருக்கு அப்பரிசுத் தொகை வழங்கப்படுவதாக அறிவித்தனர்.
தமிழகத்தில் நாயக்கர் காலம் (கி.பி. 1532 - கி.பி. 1736) நிலவியபொழுது தைப்பொங்கல் காலப்பகுதியில் ஜல்லிக்கட்டு / சல்லிக்கட்டு என்றழைக்கப்படும் காளையை அடக்கும் விழா அறிமுகப்படுத்தப்பட்டது.
பொங்கல் விழாக்களின் போது காளைகள் நெடுஞ் சாலைகளில் அவிழ்த்து விடப்பட்டு, கிராமத்து இளைஞர்கள் அவற்றை விரட்டிக் கொண்டு ஓடுவர். சாலையின் இருமருங்கிலும் மக்கள் திரண்டு ஆரவாரிப்பர். அப்பந்தயத்தில் முதலில் வந்து வெற்றிபெறும் வீரருக்குப் பரிசளிக்கப்படும்.
ஜல்லிக்கட்டு – பெயர்க் காரணம் :
ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு வரை, “சல்லி காசு” எனப்படும் நாணயங்கள் உபயோகத்தில் இருந்தன. இந்த நாணயங்களை காளையின் கொம்பில், ஒரு துணியில் போட்டு கட்டி விடுவார்கள். இதைத் தான் “சல்லி கட்டு” என்றழைத்தனர். இந்த சல்லி கட்டு போட்டியின் முடிவில் வெல்லும் வீரருக்குச் சொந்தமாகும். ” சல்லி கட்டு” என்பதே மருவி பின்னாளில்” ஜல்லிக்கட்டு” என்றானது.
சல்லிக்காசுகள் என்னும் காசுகளை நாணயங்களை மாட்டின் கொம்புகளில் அலங்காரமாக கட்டி வைத்து விளையாடும் வீர விளையாட்டு ஆதலால் சல்லி கட்டு என அழைக்கப்பட்டு ஜல்லிக்கட்டு என்று ஆகிவிட்டது.
நடுகற்களில் பொறிக்கப்படும் செய்திகள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவை. தமிழரின் வீரப்பண்பாடான ஜல்லிக்கட்டு எனும் ஏறு தழுவுதலின் போது உயிர்நீத்த வீரனுக்கும் நடுகற்கள் எழுப்பப்பட்டுள்ளது. சேலம் மாவட்டம் ஆத்தூரில் கிடைத்த கல்வெட்டு, ‘கோவுரிச் சங்கள் கருவந்துறையில் எருது விளையாடி பட்டாள் சங்கன் மகன் பெரிய பயலு நட்டகல்லு’ என்ற நடுகல்லில் ஜல்லிக்கட்டில் உயிரிழந்த சங்கன் மகனுக்கான கல்வெட்டு தமிழரின் வீரத்தியாகத்தினை வெளிப்படுத்தும் நடுகல்லாகும்.
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு விழா வாழையடி வாழையாக நடத்தப்பட்டு வரும் விழா என்பதற்கு ஆதாரமாக, சேலம் பெத்தநாயக்கன்பாளையத்தில் கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது.
ஜல்லிக்கட்டு காளையை அடக்கி, அதன் கொம்பில் கட்டப்பட்ட பரிசு பொருளை எடுக்கும் வீரனின் சிலை கிடைத்துள்ளது. கடந்த 1976-ம் ஆண்டு பெத்தநாயக்கனபாளையத்தில் கண்டெடுக்கப்பட்ட இந்த சிலையில், காளை அடக்கும் வீரனின் உருவமும், அந்த வீர விளையாட்டை விவரிக்கும் சொற்றொடர்களும் பொறிக்கப்பட்டுள்ளது.
பெத்தநாயக்கன் பாளையத்தில் 400 ஆண்டுகளுக்கு முன்பு ஆண்ட குறு நில மன்னர்கள், ஜல்லிக்கட்டு போட்டி நடத்தி, அதற்கு சான்றாக கல்வெட்டை செதுக்கி வைத்து தமிழர்களின் வீரத்தை பறைசாற்றி சென்றுள்ளனர்.
தென்பெண்ணை ஆற்றங்கரையில் அகரத்தில் இருந்து அந்த வரலாற்று சிறப்புமிக்க நமது தொன்மையை உணர்த்தும் ஏறுதழுவுதல் நடுகல்
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகிலுள்ள கரிக்கையூரில் மூன்று எருதுகளைப் பலர் கூடி விரட்டுவது போன்ற ஓவியம் காணப்படுகிறது.
புது தில்லி தேசியக் கண்காட்சியகத்தில் பாதுகாக்கப்படுகின்ற சிந்துவெளி நாகரிகம் சார்ந்த முத்திரை ஒன்றில் ஒரு காளை உருவமும் அதை அடக்க முயலும் வீரரை அக்காளை தூக்கி எறிவதும் உயிரோட்டமான விதத்தில் சித்தரிக்கப்பட்டுள்ளது. இதிலிருந்து கி.மு. 2000 ஆண்டு அளவிலேயே ஏறுதழுவல் வழக்கத்தில் இருந்தது சான்றாகி உள்ளது.
முன்னோர்களால் நடத்தப்பட்ட ஜல்லிக்கட்டு போட்டியும், காளையை அடக்கும் வீரனும், சேலம் அருங்காட்சியகத்தில் சாட்சியாக பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.
சங்க காலத்திற்கு முன்பு இருந்தே இருந்து வந்த இந்த விளையாட்டு; அதற்கு பெயர் மஞ்சுவிரட்டு அல்லது ஏறு தழுவுதல். அதில் பரிசுப் பொருட்கள் எதுவும் கிடையாது. அது பெண்களை திருமணம் செய்வதற்கான ஒரு வீரத் தகுதியாக இருந்ததே தவிர இது மாதிரி முதலில் வெற்றி பெறுபவர் என்று பல பேரை ஒரே நேரத்தில் காளைகளை அடக்கச் செய்யக்கூடிய ஒரு போட்டி விளையாட்டு கிடையாது. இந்த போட்டி விளையாட்டு நாயக்கர் காலத்தில் தான் ஏற்பட்டது. ஆனால் மஞ்சுவிரட்டு, ஏறுதழுவுதல் என்ற அந்த பழைய சங்க கால நடைமுறையை வழக்கத்தை சல்லிக்கட்டு என்ற பெயரில் நாயகர் காலத்தில் இருந்து தொடர்ந்து நடத்தி வருகின்றார்கள். இதுதான் உண்மை. சங்க காலத்தில் ஜல்லிக்கட்டு என்ற பெயர் கிடையவே கிடையாது.
----------------------------------------------------------------------------------------------------------
பல கட்டுரைகளின் இணைப்புத் தொகுப்பே
தென்பெண்ணை ஆற்றங்கரை அகர ஏறுதழுவுதல் நடுகல் - Tamil Selvan FB
https://www.dailythanthi.com/News/Districts/2018/08/01115808/The-brilliance-of-the-Tamil-heroism.vpf
https://www.dinamalar.com/news_detail.asp?id=2689859
https://www.facebook.com/unmaitamilan0/posts/1719973011599109/?paipv=0&eav=AfYsYSMMCxC6g-KOlC1knjyut6emNtXQc-BzmZzMBvVNJ1BIQ8vS7V7VGOWwEjVJfoE&_rdr
http://www.newmannar.lk/2017/01/jallikkattu21.html
https://www.facebook.com/photo?fbid=6330238997008009&set=pcb.6330250053673570
https://www.facebook.com/tamilselvenkris/posts/pfbid0Z7E6UD1k2njYRUVgwU4Fbim4VNKDKLtDL5K7fEhTswAtUX4JWvS4Za13xBtkn8Mgl
https://www.facebook.com/media/set/?set=a.2866600160298918&type=3