02/12/2025
"தாமிரபரணியில் கொல்லப்படாதவர்கள்" எனது பார்வையில்
**************************************************
நூல்: சிறுகதை தொகுப்பு
விலை: 200 ரூ
ஆசிரியர்: மாரி செல்வராஜ்
பதிப்பகம்: வம்சி
இயக்குனர் மாரி செல்வராஜ் அவர்களின் முதல் புத்தகம் தான் தாமிரபரணியில் கொல்லப்படாதவர்கள்". சி. கல்யாணி, இயக்குனர் ராம் அவர்களின் வாழ்த்துரையில் இருந்து இந்தப் புத்தகம் சுவாரசியத்தை தருகிறது. இருபத்தியொரு சிறுகதைகள் தாங்கி வந்திருக்கிறது. கருணை, நேசம், பாசம், காதல், நன்றி, துரோகம், அரசியல், சண்டை, காமம் என்று எல்லா வகையான உணர்வுகளையும் கலந்து வந்திருக்கிறது.
உளியை எப்போதும் சுமந்து கொண்டு திரிபவன் என்றாவது ஒரு நாள் சிற்பத்தைச் செதுக்கி விடுவான் என்பது போல, உணர்வுகளை சுவாசிப்பவன் ஒரு படைப்பாளியாக ஆகியே தீருவான். மண் சார்ந்த கதைக்களமும், சந்தித்த எதார்த்த வாழ்வியலையும் பதிவு செய்யும் போது, கேசரியில் கூடுதலாய் முந்திரி, திராட்சையை போட்டால் எப்படி சுவை கூடுமோ? அப்படி தான் வாசிக்கும் போது இருந்தது.
மனிதர்களின் அகத்திலிருக்கும் நேர்மறை/எதிர்மறைகளை வடிகட்டாமல் தந்திடும் போது, சில கதைகளை கடந்து போக முடியாமல் அங்கேயே நிற்க வேண்டி இருக்கிறது. அந்த இடத்திலிருந்து தான் வாசித்தல் போதையை தருகிறது.
'அவர்கள் எனக்கு சுரேஷ் என்று பெயரிட்டார்கள்' கதையில் "இனி நான் வாலை ஆட்டவில்லை மற்றும் ஆட்டப்போவதுமில்லை" என்று வளர்ப்பு நாய் பேசுகிறது.
'எனக்கு ரயில் பிடிக்காது' கதையில் தண்டவாளங்களுக்கு நடுவில் காய்ந்தும், காயாமலும் கிடக்கும் மாட்டு சாணங்களை பார்த்திருப்பீர்களா?. சத்தியமாய் பார்க்காமல் மிதித்து சீ என்று காலை தன உதறி இருப்பீர்கள்" என்ற அறிமுகத்தோடு ஆரம்பமாகும் கதை உணர்வுகளின் உச்சம்.
'அடுக்கு மல்லி' கதையில் வாசிக்கப்படாத சிவப்பு காதல் ஸ்டாலினுக்கும், பத்மாவுக்கும் இடையில். யாருக்கும் நிரூபிக்க தேவையில்லை என்று வாழ்ந்திடும் பத்மா கிடைக்காமல் போனதில் ஸ்டாலின் போலவே நானும் துர்திஷ்டசாலி தான்.
"தட்டான் பூச்சிகளின் வீடு" கதையில் உயிரை உயிராய் பாவிக்கும் மனிதம் சுமந்திடும் பால்ய வயதின் ஞானத்தை இதுவரை தேடிக்கொண்டிருக்கும் என்னைப் போன்றவனுக்கு பால்ய காலத்தின் நினைவுகள் நிழலாடியது. அதில் எத்தனையோ முகங்கள் எனது இருப்பை உறுதிப்படுத்தி சென்றது.
"மிச்சமிருக்கும் விஷம்" கதையில் "காமராசுவை எளிதில் பார்த்துவிட முடியும். ஆனால் கோமதியை அவ்வளவு எளிதாக பார்த்து விட முடியாது. அவளை பார்ப்பதற்கு நீங்கள் கோவிலில் அதிக நேரம் காத்திருக்க வேண்டும். ஒரு மழை நாளில் தன்னை மறந்து நீங்கள் நனைவீர்கள் என்றால் அவளைப் பார்க்கலாம்." இப்படி கவித்துவம் நிறைந்த வரிகள் நெஞ்சை வருடி சென்றாலும், காமராசுவும், கோமதியும் காதலோடு காற்றில் கரைந்து போனதை ஜீரணிக்க முடியாமல் தவிக்கிறேன்.
"தாமிரபரணியில் கொல்லப்படாதவர்கள்" முகிலன் தான் நேசித்த கட்சி தலைவரை காண செல்லும் இடத்தில், எந்த லட்சியம், கொள்கை என்றில்லாமல் பிடிக்கும் என்பதற்காக கூட்டத்தில் கலந்து கொண்டு, காரணமே தெரியாமல் கலவரம் வந்திட அதில் தப்பி பிழைக்கும் அவனுக்கு, ஏன் சண்டையிட்டார் என்ற காரணமே புரியாமல் இருக்கும் அவலநிலையே இன்றைய அரசியலிலும் இருப்பது ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்.
விஜியலட்சுமி, சுதா, செண்பகவள்ளி, சாந்தி, வசந்தி, ஜோ போன்ற பெண்களின் வாழ்வில் அவர்கள் சதைப்பிண்டமாகவே பார்க்க பட்டிருக்கிறார்கள்.
இந்தப் புத்தகம் வாசிக்கும் போது வித்தியாசமான
உணர்வை தந்தது. வாழ்த்துகள் மாரி செல்வராஜ் அவர்களே
இந்தப் புத்தகத்தை ஷார்ஜா புத்தக கண்காட்சியில் பரிந்துரைத்த டிஸ்கவரி புக் பேலஸ் நிறுவனர் அண்ணன் வேடியப்பன் அவர்களுக்கு நன்றி
சிவமணி